உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு பயபக்தியுடன் கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.
இதனைதொடர்ந்து கோயில் அருகில் திரண்ட திருநங்கைகள் கூத்தாண்டவர் பெருமைகளைக் கூறி கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இது மட்டுமின்றி தங்கள் வேண்டுதல் நிறைவேற உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டு வழிபட்டனர். கோயில் அருகில் மலைபோல் கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரின் பெருமைகளை பாடி ஆடினர். இரண்டு வருடங்களாக திருவிழா நடைபெறாததால் சில திருநங்கைகள் நேற்று நடைபெற்ற விழாவில் 3 தாலிகளை கட்டிக்கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.